சென்னை: நடுவர் மன்றத் தீர்ப்பின்படி காவிரியில் இருந்து தமிழகத்திற்குரிய தண்ணீரை வழங்குவது கர்நாடகா அரசின் கடமை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கர்நாடகா அரசின் அத்துமீறலுக்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டுமென வலியுறுத்தி உள்ளார். "தண்ணீர் நிரம்பி உள்ள காலமாக இருந்தாலும் பற்றாக்குறை காலமாக இருப்பினும் காவிரியில் உள்ள தண்ணீர் நிலவரத் துக்கேற்ப தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்பதே நடுவர் மன்றத்தின் தீர்ப்பாகும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உயர்ந்த கோட்பாட்டை கர்நாடகம் நிராகரித்தது கண்டனத்திற்குரியது," என முத்தரசன் கூறியுள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பை நிராகரிக்கும் கர்நாடக அரசு மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ள அவர், அதன் வழி தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கச் செய்ய வேண் டும் என்றார். இதற்கிடையே தமாகா தலைவர் வாசன் வெளியிட்ட அறிக்கையில் காவிரி நதி நீர் தொடர்பில் கர்நாடகா அரசோடு நேரிடையாகத் தொடர்பு கொண்டு அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.