பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் ஆண்டிறுதி அரசுப் பொதுத் தேர்வுத்தாட்களைத் திருத்துவது என்பது இனி இந்தியாவின் குஜராத் மாநில ஆசிரியர்களைப் பொறுத்தமட்டில் செலவுமிக்க விஷயமாக அமையலாம். ஏனெனில், தேர்வுத்தாட்களைத் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மதிப்பெண் கூட்டல் உள்ளிட்ட அம்சங்களில் தவறு செய்தால் ஒவ்வொரு தவற்றுக்கும் அவர்களுக்கு அபராதம் விதிக்க குஜராத் உயர்நிலை, மேல்நிலைக் கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. அப்படி, இவ்வாண்டு தேர்வுத்தாள் திருத்தியபோது தவறிழைத்த சுமார் 1,100 ஆசிரியர்களுக்கு அது குறித்துக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும் நூறு ரூபாய் என்ற விகிதத்தில் அந்த ஆசிரியர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்க வாரியம் தீர்மானித்துள்ளது. அந்த 1,100 ஆசிரியர்களும் சாதாரண கூட்டல் கணக்கில் தவறு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. "அவர்கள் அனைவருக்கும் கடிதம் அனுப்பி, விசாரணைக்கு அழைத்து இருக்கிறோம். அத்துடன், அவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையையும் தொடங்கிவிட்டோம். தேர்வுத்தாளைத் திருத்தும்போது ஆசிரியர் ஒருவர் தவறு செய்து, அதனால் சம்பந்தப்பட்ட மாணவர் ஐந்து மதிப்பெண்களை இழந்திருந்தால், அந்த ஆசிரியருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்," என்று வாரிய அதிகாரி ஒருவர் கூறினார்.
கணினி வழியாக மதிப்பெண் சான்றிதழ்களைத் தயாரிக்கும் பணியை மேற்கொண்டபோது ஆசிரியர்கள் செய்த தவறுகள் வெளிச்சத்திற்கு வந்தன. "சுமார் 3,200,000 தேர்வுத்தாட்களைத் திருத்துவதற்காக சுமார் 5,000 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அதற்காக ஒவ்வொரு தேர்வுத்தாளுக்கும் அவர்களுக்கு ஆறு ரூபாய் வழங்கப் பட்டது. அவர்களில் கிட்டத்தட்ட 20 விழுக்காட்டினர் மதிப்பெண் கூட்டலின் போது தவறிழைத்தனர். இதையடுத்து மீண்டும் மீண்டும் தேர்வுத்தாட்களைச் சரிபார்க்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் நேரமும் மனிதவளமும் பணமும் வீணாகிறது," என்றார் அந்த அதிகாரி. அத்துடன், இன்றைய போட்டிமிக்க சூழலில், ஒன்று அல்லது இரண்டு மதிப்பெண்களை இழப்பதால் ஒரு மாணவரின் தலையெழுத்தே, வாழ்க்கையே மாறிப் போகக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.