கோயம்புத்தூர்: கோவையில் 2014ஆம் ஆண்டு இறுதியில் பேராசிரியர் ஒருவரைப் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியது. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு நேற்று முன்தினம் மரண தண்டனை அளித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. தர்மராஜ் மகள் ரம்யா (27), எம்.இ. பட்டதாரி. இவர் ஒரு தனியார் கல்லூரியில் கணினி அறிவியல் பிரிவில் உதவி பேராசிரியையாகப் பணிபுரிந்து வந்தார். விடுதியில் தங்கி கல்லூரிக்குச் சென்று வந்தார். இந்நிலையில் 3.11.2014 அன்று காரமடையில் உள்ள தனது வீட்டுக்குத் தாயார் மாலதியுடன் வந்துள்ளார். அன்றிரவு 10 மணியளவில் திடீரென ஒருவர் வீட்டுக்குள் புகுந்து மாலதியை உருட்டுக் கட்டையால் தலையில் தாக்கியுள்ளார். அவர் மயங்கி விழுந்துள்ளார்.
சத்தம் கேட்டு ஓடி வந்த ரம்யாவின் தலையிலும் உருட்டுக்கட்டையால் தாக்கியதால் அவரும் மயங்கி விழுந்துள்ளார். பின்பு மயங்கிய நிலையில் இருந்த ரம்யாவை அந்த இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறிது நேரத்தில் ரம்யா உயிரிழந்தார். பின்பு இருவரும் அணிந்திருந்த ஆறரை பவுன் தங்க நகை மற்றும் ஒரு கையடக்கக் கணினியையும் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச் சென்றார். இந்த வழக்கு விசாரணை கோயம்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ராஜா நேற்றுத் தீர்ப்பளித்தார். அதில், அத்துமீறி நுழைதல், பாலியல் வன்கொடுமை, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்டவற்றுக்குத் தலா ரூ.5,000 வீதம் ரூ.25,000 அபராதமும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்கவும், கொலை செய்த காரணத்துக்காக மரண தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.