காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி மின் விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் அச்சம்பவம் நிகழ்ந்தது. உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் நெருங்குவதையொட்டி அம்மாநிலத்தில் உள்ள 223 சட்டமன்றத் தொகுதிகளை இணைக்கும் வகையில் பேரணி நடத்தி வருகிறார் ராகுல். கிட்டத்தட்ட 2,500 கிலோ மீட்டர் தூரமுள்ள பேரணியின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் ஆக்ரா சென்று சேர்ந்தார்.
அங்குள்ள தாஜ் நகரத்தின் ஃபவ்வாரா பகுதியில் உள்ள மகாராஜா ஆக்ராசென் சிலைக்கு மரியாதை செலுத்தும் விதமாக மாலை ஒன்றை அந்தச் சிலைக்கு அணிவிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த மின்சாரக் கம்பி ஒன்று ரா-குலின் தலையில் உரசியது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட ராகுல், தலையைக் குனிந்தவாறே பின்னோக்கி நகர்ந்தார். ராகுல் நிலைதடுமாறுவதைக் கண்ட சிறப்பு பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தோர் தெரிவித்தனர். படம்: இந்திய ஊடகம்