தமிழ்நாட்டில் இம்மாதம் 17, 19ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கவிருந்த உள்ளாட்சித் தேர் தலை ரத்து செய்வதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவிக் காலம் இம்மாதத்துடன் முடிவடைவதால் எந்த நேரத்திலும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் 25ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறி விப்பாணையைத் தமிழகத் தேர்தல் ஆணையர் சீதாராமன் வெளி யிட்டார். மறுநாளே வேட்புமனுத் தாக்கல் தொடங்கப்பட்டது அதிர்ச்சி அளிப் பதாக இருந்தது. இவ்வளவு அவசர அவசரமாகத் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டதற்குப் பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. ஆனால், அதிமுக மட்டும் உடனடியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு ஆச்சரியமளித்தது.
இதையடுத்து, "உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. எடுத்துக் காட்டாக, சென்னையில் உள்ள 200 வார்டுகளில் ஒன்றுகூட பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட வில்லை. அதேபோல, தேர்தல் தேதியை அறிவித்த மறுநாளே வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என அறிவித்திருப்பதைப் பார்க்கும்போது ஆளுங்கட்சிக்குச் சாத கமாக தேர்தல் ஆணையம் செயல் படுவதுபோல் தெரிகிறது," என்று கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இதற்கிடையே, தேர்தல் ஆணை யம் அறிவித்தபடி வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பேர் தேர்தலில் போட்டியிட விரும்பி மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில், திமுக தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முந்தைய திமுக, அதிமுக ஆட்சிக் காலங்களில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளே இம்முறையும் பின்பற்றப்பட்டுள்ள தாகத் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி கிருபாகரன் நேற்று தீர்ப்பு வழங்கினார். உள்ளாட்சித் தேர்தல் தொடர் பான மூன்று ஆணைகளை ரத்து செய்வதாகவும் புதிதாக அறிவிப் பாணை வெளியிட்டு டிசம்பர் 30ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தவேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.