கடந்த மாதம் 28ஆம் தேதி நள்ளிரவு இந்திய விமானப் படையும் இந்திய ராணுவமும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து அங்கிருந்த சில பயங்கரவாத ராணுவ முகாம்களை அழித்தன. அப்போது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இருவரும் கொல்லப்பட்டனர். ஆயினும், அப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்று பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. இருந்தபோதும், அந்தத் தாக்குதல்களை ஆளில்லா விமானங்கள் மூலம் காணொளியாகவும் புகைப்படங்களாகவும் பதிவு செய்திருப்பதாக இந்திய ராணுவம் குறிப்பிட்டது. இந்திய எதிர்க்கட்சிகளும் ஆதாரங்களை வெளியிடும்படி அரசை வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், தாக்குதல் தொடர்பான காணொளி, புகைப்பட ஆதாரங்களை இந்திய ராணுவம் அந்நாட்டு அரசாங்கத்திடம் அளித்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அந்த ஆதாரங்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, தாக்குதல் நடத்தப்பட்டது உண்மைதான் என நேரில் கண்ட சிலர் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாக்குதல் சிறிது நேரமே நீடித்தாலும் அவை ஆற்றல்மிக்கதாக இருந்தது என்றும் அதில் பயங்கரவாதிகள் இருந்த தற்காலிக கட்டடங்கள் அடியோடு அழிக்கப்பட்டன என்றும் மறுநாள் காலையில் அங்கிருந்த சடலங்கள் ஒரு 'டிரக்'கில் எடுத்துச்செல்லப்பட்டதாகவும் அவர்கள் சொன்னதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.