ஈரோடு: மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும் படிக்க முடியாமல் ஏழை மாணவி ஒருவர் திண்டாடுகிறார். கல்லூரியில் சேர்ந்து படிக்க கல்லூரி கட்டணம், இதர கட்டணம் என ஆறு லட்ச ரூபாய் அவருக்குத் தேவைப்படுவதால் உதவி செய்யும்படி அந்த மாணவி மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஈரோடு அருகே உள்ள வெள்ளோட்டை அடுத்த மைலாடி ஊரைச் சேர்ந்த சின்னசாமி என்ற விவசாய கூலி தொழிலாளியின் மகள் பிரித்தி, 18, கோபியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து +2வில் 1088 மதிப்பெண்கள் பெற்றார். இந்த நிலையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ ஆராய்ச்சிக் கல்லூரியில் அவருக்கு எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்தது. இந்த நிலையில் மாணவி பிரித்தி நேற்று ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரபாகரிடம் ஒரு மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், மருத்துவக் கல்லூரியில் படிக்க வாய்ப்புக் கிடைத்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் மருத்துவம் படிக்க ஆறு லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. கூலித் தொழிலாளியான என் தந்தையால் பணத்தை புரட்டமுடியவில்லை. நான் படித்து டாக்டர் ஆகிவிட்டால் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பேன். என்னுடைய மருத்துவப் படிப்புக்கு உதவி செய்ய வேண்டுகிறேன்," என்று பிரித்தி கோரிக்கை விடுத்துள்ளார்.