தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்றாலும் அவருக்கு நீண்ட நாள் சிகிச்சை தேவை என்று அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனையின் தலைமைச் செயலக அதிகாரி சுப்பையா விசுவநாதன் வெளியிட்ட அறிக்கையில், "அவருக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் அனைத்தும் தொடர வேண்டும் என்பதை மருத்துவ நிபுணர்கள் குழுவினர் அனைவரும் பரிந்துரைத்துள்ளனர். எனவே மருத்துவமனையில் ஜெயலலிதா நீண்ட நாள் தங்கி சிகிச்சை பெறும் தேவை ஏற்பட்டுள்ளது," என்று கூறியுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவு, இதய மருத்துவப் பிரிவு, நுரையீரல், நோய்த் தொற்று, நீரிழிவு ஆகிய துறைகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் குழுவினர் ஜெயலலிதா வின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அவருக்கு ஏற்கெனவே உள்ள நீரிழிவு நோய், குளிர்காலத்தில் ஏற்படும் மூச்சுக்குழல் அழற்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும் மருத்துவர்களின் தொடர் ஆலோசனைகள், மருத்துவ ஆய்வுகளின் அடிப்படை யிலும் மருத்துவ நிபுணர்கள் குழுவினர் விரிவான மருத்துவ சிகிச்சைத் திட்டத்தை உரு வாக்கியுள்ளனர். தற்போது அவருக்குச் செயற்கை சுவாசம், நுரையீரலில் ஏற்பட்டுள்ள நோய்த் தொற்றுக்கான மருந்துகள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள், ஊட்டச்சத்துகள், பொது மருத்துவ சிகிச்சை போன்றவை அளிக்கப்பட்டு வருகின்றன என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, திடீர் பயணமாக அப்போலோ மருத்துவ மனைக்கு நேற்று முற்பகல் வந்த காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, "முதல்வர் ஜெயலலிதாவுக்கு நானும் காங்கிரஸ் கட்சியும் உறுதுணையாக இருப்போம்," என்று கூறியுள்ளார். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்த தகவல்களை அவர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா உடல் நலம் தேறி வருவதாகவும் அவர் விரைவில் குணமடைவார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்ததாகச் சொன்னார். ஜெயலலிதா செப்டம்பர் 22ஆம் தேதி காய்ச்சல், நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 15 நாட்களுக்கு மேலாகியும் அவரது உடல்நிலை குறித்த விளக்கங்களோ, புகைப்படங் களோ வெளிவராத நிலையில் தமிழகத்தின் ஆட்சி குறித்தும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்தும் பல தரப்பினரும் அக் கறை தெரிவித்து வருகின்றனர்.