சென்னை: தபால் மூலம் போதைப்பொருள் கடத்த முயன்ற வழக்கில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவருக்கு ஈராண்டு சிறைத் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. சென்னையில் தங்கியிருக்கும் வெளிநாட்டு நபர் ஒருவர் தென் ஆப்பிரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தப் போவதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலி சாருக்கு 2014ஆம் ஆண்டு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை அம்பத்தூர் தபால் அலுவலகம் அருகே அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது, நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஹென்றி சிதி (38) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், தென் ஆப்பிரிக்காவுக்கு மூன்று பார்சல்களை அனுப்ப தாம் தபால் அலுவலகம் வந்ததாக அவர் கூறினார்.
அந்தப் பார்சல்களை அதிகாரிகள் பிரித்துப் பார்த்தபோது, அதில் 'ஹெராயின்' போதைப்பொருள் இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, போலிசார் அவரைக் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சென்னையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ.ஜெஸ்டீன் டேவிட், குற்றவாளி ஹென்றி சிதிக்கு ஈராண்டு சிறையும் ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.