போபால்: மத்திய பிரதேசம் மாநிலத்தில் பக்தர்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மத்திய பிரதேசம் மாநிலம், சியோனி மாவட்டத்தில் நடந்த நவராத்தி வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது அங்குள்ள கோயிலில் கூடியிருந்த பக்தர்கள் கூட்டத்தின் மீது லாரி மோதி விபத்துக் குள்ளானது. இந்த விபத்தில் 3 பெண்கள், 4 குழந்தைகள் என 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கோயிலுக்கு அருகே பக்தர்கள் சென்று கொண்டிருந்தபோது அவர்கள் மீது லாரி மோதி இந்த விபத்து ஏற்பட்டதாகக் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இருந்து லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். நடத்துநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.