கரூர்: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் ஆளும்கட்சிக்கு சாதகமாகச் செயல்பட்டதாக திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு குற்றம்சாட்டி உள்ளார். தேர்தல் ஆணையமானது நேர்மையாகச் செயல்பட்டிருந்தால் திமுக ஆட்சியை பிடித்திருக்கும் என்று கரூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார். நூலிழை வித்தியாசத்தில்தான் அதிமுகவால் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது என அவர் சுட்டிக்காட்டினார். "அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளரைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். அவர் கரூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தபோது மருத்துவக் கல்லூரி, பேருந்து நிலையம் கொண்டு வரப்போவதாக உறுதியளித்தார்.
ஆனால் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. "இப்போது மக்களை ஏமாற்றி விட்டு அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுகிறார். ஆனால் அத்தொகுதி மக்கள் ஏமாறமாட்டார்கள்," என்றார் வேலு. அரவக்குறிச்சி தொகுதியில் திமுகவின் வெற்றி முன்பே நிச்சயிக்கப்பட்டு விட்டதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் விலைவாசி உயர்வு, பண புழக்கம் இல்லாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.