புதுவை: மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் மத்தியில் எந்தவித கருத்து வேறுபாடுகளும் எழவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புதுவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி நதிநீர் பிரச்சினையில் மக்கள் நலக் கூட்டணி ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருவதாகக் கூறினார். "எங்கள் கூட்டணியில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லை. திமுக கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பில் மதிமுக பொதுச்செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலர் திருமாவளவன் இடையே கருத்து வேறுபாடும் எழுந்ததாகக் கூறுவதில் உண்மை இல்லை.
"எந்த ஒரு பிரச்சினை குறித்தும் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் அனைவரும் கலந்து பேசியே முடிவெடுத்து வருகிறோம். அதன்படிதான் திமுக கூட்டம் குறித்தும் விவாதித்து முடிவெடுத்தோம்," என்றார் ஜி. ராமகிருஷ்ணன். எனினும் திருமாவளவன், வைகோ இடையே மறைமுக மோதல் நடந்து கொண்டிருப்ப தாகத் தமிழக ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.2016-10-27 06:00:00 +0800