தஞ்சாவூர், அரவக்குறிச்சி திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு அதிமுக சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களில் முதல்வர் ஜெயலலிதாவின் பெருவிரல் ரேகை பதிக்கப்பட்டிருப்பதால் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்படும் என மூத்த வழக்கறிஞர் துரைசாமி கூறியுள்ளார். தமிழக முதல்வரும் அதிமுகவின் தலைவியுமான திருவாட்டி ஜெயலலிதா சென்ற மாதம் 22ஆம் தேதி அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அடுத்த மாதம் 19ஆம் தேதி இரண்டு தொகுதிகளில் தேர்தலும் திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தலும் நடைபெற இருப்பதால் சென்ற வெள்ளிக்கிழமை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கும்படி கோரும் 'பி' படிவத்தில் முதல்வரின் கையொப்பத்துக்குப் பதிலாக அவரது இடதுகைப் பெருவிரல் ரேகை பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால் மனுக்களின் மற்றொரு படிவத்தில் அவரது கையொப்பம் உள்ளது.
ஒரே மனுவின் ஒரு படிவத்தில் கையொப்பமும் மற்றொரு படிவத்தில் பெருவிரல் ரேகையும் பதிவு செய்யப்பட்டிருப்பதால் வேட்பு மனுக்கள் செல்லுபடியாகமாட்டா என மூத்த வழக்கறிஞர் துரைசாமி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக விளக்கம் அளித்திருந்த தேர்தல் ஆணையம், கையெழுத்திட இயலாத நிலையில் உள்ள ஒருவர் வேட்புமனுவில் பெருவிரல் ரேகை வைக்கலாம் எனக் குறிப்பிட்டிருந்தது.2016-10-31 06:00:00 +0800