மதுரை: உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 3 கிலோ தங்கமும் 19 லட்சம் ரூபாய் ரொக்கப் பண மும் தேர்தல் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டன. மதுரையில் உள்ள திருப் பரங்குன்றம் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதே போல் அரவக்குறிச்சி, தஞ்சை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இம்மூன்று தொகுதிகளையும் உள்ளடக்கிய மதுரை, தஞ்சை, கரூர் மாவட்டங்களில் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. எனவே ஆங்காங்கு தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மேலூர் அருகே நடந்த வாகனச் சோதனையின் போது ஒரு காரில் ரொக்கப் பணமும் தங்கமும் இருப்பது தெரிய வந்தது. எனினும் காரில் வந்தவரிடம் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை. இதையடுத்து அவற்றை அதிகா ரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் நடந்த விசாரணையில் அவை மதுரை தெற்கு ஆவணி மூல வீதியைச் சேர்ந்த நகைக் கடை உரிமையாளருக்குச் சொந்த மானது என தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் அதிகா ரிகள் விசாரணை நடத்தினர். இதற்கிடையே மூன்று தொகுதி களுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இன்று வேட்பு மனுக்கள் பரிசீலிக் கப்படுகின்றன. 5ஆம் தேதிக்குள் மனுக்களை திரும்பப் பெற அவகாசம் உள்ளது. அதன்பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இந்நிலையில் தேர்தலின் போது பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள துணை ராணுவப் படையினர் தமிழகம் வந்துள்ளனர். அவர்கள் மூன்று தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இம்முறை அதிமுக, திமுக, தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி இன்றி தனித்து களமிறங்கி உள்ளதால் தேர்தல் களத்தில் கடும் போட்டி நிலவுகிறது. இதேபோல் புதுவை மாநிலம், நெல்லித்தோப்பு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நான்கு தொகுதிகளிலும் வரும் 19ஆம் தேதி வாக்குப் பதிவும் 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. தற்போது பிரசாரம் சூடு பிடித்துள்ளது.