மும்பை: பணியில் இருந்து ஓய்வு பெற்ற கார் ஓட்டுநருக்கு மாவட்ட ஆட்சியரே ஓட்டுநராக மாறிய நெகிழ்ச்சியான சம்பவம் (படம்) மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், அகோலா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றியவர் திகம்பர் தாக், 58. சுமார் 35 ஆண்டுகாலம் ஆட்சியர் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்த திகம்பர் அண்மையில் தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
இதையொட்டி ஆட்சியர் ஸ்ரீகாந்த் ஓட்டுநர் திகம்பருக்கு அளித்த பரிசு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ரோஜாப்பூக்களைக் கொண்டு நன்கு அலங்கரிக்கப்பட்ட காரின் பின் இருக்கையில் திகம்பரை அமரவைத்து ஆட்சியர் ஸ்ரீகாந்த் தானே அந்தக் காரை ஓட்டிச்சென்று அவரை வீட்டில் இறக்கிவிட்டிருக்கிறார்.
இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில் "சுமார் 35 ஆண்டுகாலம் 18 ஆட்சியர்களுக்கு ஓட்டுநராகத் திகம்பர் பணிபுரிந்திருக்கிறார். இந்த 35 ஆண்டுகளில் எந்தவொரு சிறு விபத்தையும் அவர் ஏற்படுத்தவில்லை. இதனால் திகம்பரின் ஓய்வு நாளை மறக்கமுடியாத நாளாக மாற்றிட நான் செய்த யோசனைதான் அவருக்கு ஓட்டுநராக மாறியது," எனத் தெரிவித்துள்ளார்.