புதுடெல்லி: பட்டம் பறக்கப் பயன்படுத்தப் படுவதற்கு கண்ணாடிப் பசை பூச்சுடன் ஆன நைலான் அல்லது செயற்கைப் பருத்தி நூலைப் பயன்படுத்த நாடு முழுதும் இடைக்காலத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 'மாஞ்சா' நூல் என்றழைக்கப்படும் இவ்வகை நூலில் பட்டம் பறக்கவிடும்போது அந்த நூல், சாலைகளில் செல்வோரது கழுத்தில் சிக்கி ஏராளமானோர் பலியாகியுள்ளனர். பறவைகள், சாலைகளில் செல்லும் ஆடு, மாடுகளும் இந்த நூலால் பலியாகியுள்ளன.
எனவே "மாஞ்சா நூலுக்குத் தடை விதிக்கவேண்டும்," என்று கோரி விலங்குகள் நல அமைப்பான "பீட்டா" தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை, பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவரும் நீதிபதியுமான சுவதந்தர் குமார் தலைமையிலான அமர்வு முன்பாக நேற்று முன்தினம் நடந்தது. அப்போது 'மாஞ்சா' நூல் கொள்முதல் செய்வது, இருப்பு வைப்பது, விற்பனை செய்வது, பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.