புதுடெல்லி: வங்கிகளில் அதிக பணம் டெபாசிட் செய்த 3,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் 291 பேரிடம் இருந்து கறுப்புப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார். பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வரும் 30ஆம் தேதி வரை வங்கி, அஞ்சல் நிலையங்களில் டெபாசிட் செய்யலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளதால் மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து வருகின்றனர்.
"வங்கிக் கணக்கில் அதிக பணம் செலுத்திய 3,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. செயல்படாத வங்கிக் கணக்குகள், ஜன்தன் வங்கிக் கணக்குகள் கண்காணிக்கப் பட்டு வருகிறது. 291 இடங்களில் நடத்திய சோதனையில் தற்போது வரை 316 கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 76 கோடி மதிப்பிலான நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன," என்று சுஷில் சந்திரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.