திருச்சி: திருச்சி உறையூரில் குப்பை தொட்டியில் பழைய 1000 ரூபாய் நோட்டுகள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்ததை பொதுமக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மத்திய அரசின் செல்லா நோட்டு அதிரடி நடவடிக்கையின் காரணமாக கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பல வழிகளில் அவற்றை மாற்றி வருகின்றனர். மாற்றுவதில் வங்கிகளில் அதிக கட்டுப்பாடுகள் இருப்பதால் மீதம் இருக்கும் கணக்கில் வராத பணத்தை மாற்ற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதில் பாதிக்கப்பட்டவர் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவிலான 1000 ரூபாய் நோட்டுகளைத் துண்டு துண்டாக வெட்டி திருச்சி உறையூர் பகுதியில் இருக்கும் ஒரு குப்பைத் தொட்டியில் வீசிவிட்டுச் சென்றிருக்கிறார். அதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தச் செய்தி தீபோல் பரவியதைத் தொடர்ந்து மக்கள் குப்பைத் தொட்டியில் கிடந்த கிழிந்த நோட்டுகளைக் கைகளில் அள்ளிச் சென்றனர். இதுகுறித்து போலிசார் விசாரணை நடத்துகின்றனர்.