சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டபோதிலும் மெரினாவில் போராட்டம் நீடித்து வருகிறது. எட்டாவது நாளாக அங்கு கூடியுள்ள போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட மூன்று முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். தற்போதைய நிலையில் அங்கு 200 பேர் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவும் தண்ணீரும் கிடைக்காத வகையில் காவல்துறை கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளது. எனினும் கடல் வழியே கட்டுமரத்தில் போராட்டக்காரர் களுக்குத் தேவையான பொருட்கள் கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்பட்டன. தற்போது இதற்கும் கடலோர காவல்படை தடை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் போராட்டக்காரர்கள் மூன்று கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்குத் தடை நீக்கத்துக்கான நிரந்தர சட்ட நகலை உரிய அங்கீகார முத்திரையுடன் வழங்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட அனைவரையும் எந்த நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும், காயம் அடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் ஆகியவையே அம்மூன்று கோரிக்கைகள் ஆகும். தொடர்ந்து 8ஆவது நாளாக மெரினாவில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதால் கடற்கரை நோக்கிச் செல்லும் 10 சாலைகளில் போலிசார் தடுப்புகள் ஏற்படுத்தி உள்ளனர். அச்சாலைகளில் வாகனங்கள் செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.