சென்னை: சட்டமன்ற உறுப்பினர் கீதாவைக் காணவில்லை என அவரது கணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை அக்கட்சியின் செயலாளர் சசிகலா நேற்று முன்தினம் கூட்டி யிருந்தார். வழக்கமாக கூட்டம் முடிந்து எம்எல்ஏக்கள் விடுதிக்கோ தங்கள் வீடுகளுக்கோ செல்வார்கள். ஆனால், நேற்று கூட்டம் முடிந்ததும் எம்எல்ஏக்கள் யாரையும் அதிமுக தலைமை வெளியில் விடவில்லை. அமைச்சர்களைப் பொறுப்பாளர்களாகப் போட்டு, அவர்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்படி செய்தனர்.
அதன்பின், மதிய உணவு முடித்து பிற்பகல் 3.20 மணிக்கு மூன்று சொகுசுப் பேருந்துகளில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இந்நிலையில், தனது மனைவியைக் காணவில்லையென கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதாவின் கணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். முன்னதாக, நேற்றுக் காலை சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், 130க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களைக் காணவில்லை எனக் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், அரசு தரப்பு வழக்கறிஞர் ராஜேந்திரன் விளக்கத்தையடுத்து அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.