புதுடெல்லி: சுற்றுப்புற மாசு காரணமாக அண்மைக் காலத்தில் மழை நீரின் அமிலத் தன்மை அதிகரித்து வருவதாகத் தெரியவந்துள்ளது. மழைநீரில் அமிலத் தன்மை அதிகரிப்பதால் மண்வளம் பாதிக்கப்பட்டு விவசாய உற்பத்தி குறையும் அபாயம் உள்ளது என்கிறார்கள் நில, நீர்வள நிபுணர்கள். "தாஜ்மகால் போன்ற நினைவுச் சின்னங்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகும். அமிலத் தன்மை கூடிய மழையால் கட்டடங்களின் உறுதித் தன்மை பாதிக்கப்படும்.
"நீரில் அதிக அளவு உலோகம் கலக்க வாய்ப்பு இருப்பதால், அதை அருந்தும் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்," என விஞ்ஞானிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டின் பல்வேறு நகரங்களில் மழை நீரை ஆய்வுக்கு உட்படுத்தியபோது அமிலத் தன்மை அதிகரிப்பு குறித்து தெரியவந்துள்ளது. நாக்பூர், மோகன்பாரி (அசாம்), அலகாபாத், விசாகப்பட்டிணம், கொடைக்கானல் போன்ற பல்வேறு இடங்களில் பெய்த மழை நீரை சோதித்ததில், அமிலத்தன்மை முந்தைய அளவைவிட அதிகரித்திருப்பது உறுதியாகி உள்ளது. தொழிற்சாலைகள் மூலம் வெளியேறும் புகை, வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு போன்றவற்றால் நாளுக்கு நாள் சுற்றுப்புறம் மாசு அடைந்து வருகிறது.