புதுக்கோட்டை: நெடுவாசல் போராட்டக் களத்துக்குச் சென்ற பாஜக தேசிய செயலர் எச்.ராஜாவுக்கு எதிராக அங்கிருந்த இளையர்கள் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். போராட்டத்தைக் கைவிடவேண்டும் என வலியுறுத்தவே நெடுவாசல் கிராமத்துக்கு நேரில் சென்றிருந்தார் ராஜா. இதனால் ஆவேசமடைந்த இளையர்கள், நெடுவாசலை விட்டு ராஜா உடனடியாக வெளியேற வேண்டும் என வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே, மத்திய அரசை வலியுறுத்தி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் என தமிழக அரசுக்கு முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். "இந்தத் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என்று மாநில அரசு சொன்னாலும் மத்திய அரசு மௌனமாக உள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் எந்தப் பாதிப்பும் இல்லை என்று மத்திய அரமைச்சர்களும், பாஜக தலைவர்களும் சொல்லி வருகிறார்கள்," என முத்தரசன் சுட்டிக்காட்டினார்.