சென்னை: தேச துரோக வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள மதிமுக பொதுச் செயலர் வைகோவின் நீதிமன்றக் காவல் ஜூன் 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார் வைகோ. அப்போது அவர் தெரிவித்த சில கருத்துகள் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையிலும் இருந்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, தமிழக போலிசார் அவர் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த 4ஆம் தேதி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்தபோது வைகோ நேரில் முன்னிலையானார்.
பின்னர் இந்த வழக்கு தொடர்பில் சரணடைவதாக நீதிபதியிடம் வைகோ சொன்னார். அவர் விரும்பினால் சொந்தப் பிணையில் செல்ல நீதிபதி அனுமதி அளித்தார். ஆனால், தான் அதை விரும்பவில்லை என்றார் வைகோ. இதையடுத்து ஏப்ரல் 17ஆம் தேதி வரை வைகோவை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரது காவல் பின்னர் 27ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது வைகோவை ஜூன் 2ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.