சத்தீஷ்கர்: சத்தீஷ்கர் மாநில சுக்மா மாவட்டத்தில் ஏப்ரல் 24ஆம் தேதி மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 25 சிஆர்பிஎஃப் படையினர் பலியான சம்பவத்தன்று என்ன நடந்தது என்பது பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் 24ஆம் தேதி அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பெண்கள் சிலபேரை புர்கபால் கிராமத்தில் கொண்டு வந்து இறக்கிவிட்டுச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. அந்த கிராமத்தில் சுமார் 650 பழங்குடியின மக்களே வாழ்ந்து வருகின்றனர். அந்த கிராமத்தில் இறக்கி விடப்பட்ட பெண்கள் பார்ப்பதற்கு அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் போலவே தோற்றமளித்தனர்.
புர்கபால் கிராமத்தின் அருகே சாலைத் திட்டம் ஒன்றின் பாலக்கட்டுமானத்தை சிஆர்பிஎஃப்பின் 74வது பட்டாலியன் வீரர்கள் பாதுகாத்து வந்தனர். அந்த கிராமவாசிகள் அனைவரும் ஏற்கெனவே அந்த கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்டது குறித்து சிஆர்பிஎஃப் வீரர்கள் அறிந்திருக்கவில்லை. வீரர்கள் சாலையில் இரு புறங்களிலும் சென்று கொண்டிருந்தபோது திடீரென துப்பாக்கித் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.
அன்றைய தினம் காலையில் வாகனம் ஒன்றில் வந்திறங்கிய பெண்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதில் 25 ஜவான்கள் பலியாகினர். பழங்குடி பெண்கள் மீது சிஆர்பிஎப் வீரர்கள் மேற்கொண்ட பாலியல் பலாத்காரத்திற்குப் பதிலடிதான் இந்தத் தாக்குதல் என்று பழங்குடி மக்களின் தரப்பில் கூறப்பட்டது. பாதுகாப்புப் படையினரிடமிருந்து ஆயுதங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. இந்தத் தாக்குதலுக்கு கிராம மக்கள் ஆதரவாக இருப்பதாக வீரர்களின் தரப்பில் கூறப்பட்டாலும் கிராமவாசிகள் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர்.