போபால்: ரயிலில் உறங்கிய பயணியை எழுப்ப மறந்த ரயில்வே நிர்வாகத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா மின்னிலக்க மயமாகி வருகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இதன் காரணமாக பொதுமக்களுக்கு ஏராளமான சிக்கல்கள் எற்படுகின்றன. அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளும் காணப்பட வேண்டியது அவசியமாகிறது. 2015ஆம் ஆண்டு கோவை- ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் மத்திய பிரதேசத்தில் உள்ள பெதுல் நிலையத்தில் பிற்பகல் 2 மணிக்கு வழக்கறிஞர் கிரீஸ் கார்க் என்பவர் ஏறினார்.
தமது கைபேசி மூலம் ரயில்வேயின் சேவை எண்ணான 139க்குத் தொடர்புகொண்டு மறுநாள் காலை கோடா நிலையத்தை அடைவதற்கு முன்பாக அதிகாலை 1.40மணிக்குத் தம்மை எழுப்பும்படி பதிவு செய்தார். இந்த சேவையை அளிப்பதாக மறுமுனையில் நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு என்பதால் நன்றாக உறங்கிக்கொண்டிருந்த கிரீஸ் கார்க் கோடா நிலையம் வந்ததும் தூக்க கலக்கத்தில் அடித்துப்பிடித்துக்கொண்டு கடைசி நேரத்தில் இறங்கினார்.
இதனால் தாம் கடும் மன உளைச்சல் அடைந்ததாகக் குறிப்பிட்ட அவர் இந்த சேவையை அளிக்கத் தவறியதால் தனக்கு ரூ.20,000 இழப்பீட்டை ரயில்வே துறை வழங்க வேண்டும் எனப் பெதுல் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரயில்வே நிர்வாகம் கிரீஸ் கார்குக்கு ஐந்தாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.