பெங்களூரு: அதிமுக இரண்டாகப் பிளவுபட்டுள்ள நிலையில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, அதிமுகவினரை ஒருங்கிணைக்கும் வகையில் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த அறிக்கை இன்று வெளியாகக்கூடும் என்றும் அதில் ஓபிஎஸ், முதல்வர் எடப்பாடி தலைமையிலான அணிகளின் பெயர்களைக் குறிப்பிடாமல், அதிமுகவினர் ஒற்றுமையாக இருக்கவேண்டும் எனும் கருத்தை அவர் உருக்கமான முறையில் வலியுறுத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே பெங்களூரு சிறையில் இளவரசியுடன் சேர்ந்து ஒரே அறையில் இருந்து வந்த சசிகலா, தற்போது தனி அறைக்கு மாறியிருப்பதாகத் தெரிகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவருக்கு தனி அறை கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அதில் மின் விசிறி, தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட வசதிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சசிகலா தினந்தோறும் ஜெயலலிதா நடித்துள்ள திரைப்படங்களைப் பார்த்து பொழுதுபோக்குவதாகத் தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது.