கடலூர்: நடராஜர் கோவிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சிதம்பரத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. நேற்று முன்தினம் கோவில் அமைந்துள்ள பகுதியில் இயங்கி வரும் உணவகம் முன்பு அஞ்சல் அட்டை ஒன்று கீழே கிடந்தது. அதை ஒருவர் எடுத்துப் படித்தபோது, நடராஜர் கோவிலில் இன்று குண்டு வெடிக்கும், கோவில் தரைமட்டமாகும்," என்று அல்-கொய்தா அமைப்பின் பெயருடன் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து உணவக உரிமையாளர் போலிசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலிசார் உடனடியாக மோப்ப நாயுடன் விரைந்து வந்து கோவில் முழுவதும் வெடிகுண்டு சோதனை நடத்தினர். எனினும் மூன்றரை மணி நேர சோதனைக்குப் பிறகும் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இதற்கிடையே, கோவிலில் பூசை செய்யும் தீட்சிதர் ஒருவருக்கும் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. போலிஸ் விசாரணையில் இரு கடிதங்களிலும் உள்ள கையெழுத்து ஒரே மாதிரியாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் கோவில் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.