புதுடெல்லி: மும்பை சுங்கத்துறையின் புலனாய்வுப் பிரிவினர், ஒரே விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண் உட்பட 21 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் ரூ.1.70 கோடி மதிப்புள்ள தங்கத்தைக் கடத்த முயற்சி செய்துள்ளனர். சென்ற ஞாயிற்றுக்கிழமை ஜெடாவிலிருந்து மும்பை வந்த ஜெட் ஏர்வேஸ் விமானத் தின் பயணிகளை அதிகாரிகள் நோட்டமிட்டனர். அப்போது நடைபெற்ற சோதனையில் தண்ணீர் போத்தல்களின் அடியில் தங்கக் கட்டிகள் ஒட்டி மறைத்து வைக்கப் பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதில் மொத்தம் 112 தங்கக் கட்டிகள் கைப்பற்றப் பட்டன. விசாரணையில் தங்கம் கடத்திய பயணிகள் அனைவரும் உத்தரப்பிரதேச ராம்பூர் மாவட்டத்தில் உள்ள டண்டா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். தங்கம் கடத்தலில் ஒரே சமயத்தில் 21 பேர் கைது செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்று நம்பப்படுகிறது. இதன் மூலம் தங்கம் கடத்தலில் ஈடுபடும் கும்பல் பற்றிய விவரமும் தெரிய வந்துள்ளது.
தண்ணீர் போத்தலின் அடியில் மறைத்து வைக்கப் பட்டிருந்த 112 தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். படம்: இந்திய ஊடகம்