தஞ்சை: நாட்டின் நூறாவது சுதந்திர தினத்திற்குள் இந்தியாவை வெளிநாட்டிற்கு முழுவதுமாக விற்றுவிடுவார்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். அஸ்தம்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழக மக்கள் நலன் கருதி பல்வேறு போராட்டங்கள் நடைபெறும் நிலையில், நடிகர் ரஜினிகாந்தோ, அமெரிக்காவில் சூதாட்ட மையத்தில் சூதாடிக்கொண்டிருப்பதாக விமர்சித்தார்.
"பிரதமர் மோடி ஏதாவது குண்டைப் போட்டுவிட்டு வெளிநாடு போய் விடுகிறார். முன்பு மாட்டிறைச்சிக்கான தடை, தற்போது ஜிஎஸ்டி வரி. "இந்தியாவில் கறி, வரி இரண்டுமே பிரச்சினையாக இருக்கிறது. பிரதமரோ கண்டுகொள்ளாமல் இஸ்ரேல் சென்றுவிட்டார். ஊதுபத்தி, கொசுவர்த்தி, மெழுகுவர்த்திக்கு எல்லாம் வரி விதித்துள்ளனர்," என்றார் சீமான். இதற்கிடையே நடிகர் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி மீண்டும் கூறியுள்ளார். அவ்வாறு வந்தால் ரஜினிக்குத்தான் ஆபத்து என்றும் அவர் தெரிவித்துள்ளார்.