புதுடெல்லி: கறுப்புப் பண புழக்கத்தைத் தடுப்பது, சட்ட விரோத சொத்துகள் தொடர்பான புள்ளி விவரத்தை மத்திய கூட்டுறவு விவகாரத்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது. அரசின் புள்ளி விவர கணக்கின்படி, ரூபாய் நோட்டு மதிப்பிழப்பிற்கு பின் 73,000க்கும் அதிகமான பதிவு செய்யப்படாத வங்கிக் கணக்குகளில் ரூ.24,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய 2.26 லட்சம் நிறுவனங்கள் தங்களின் பெயர்களை பதிவுசெய்துவிட்டு தொழில்களை நீண்ட காலம் தொடரவில்லை.
சட்ட விரோதமாக நிதி பெறுவதற்காகவே பெரும்பாலான நிறுவனங்கள் துவங்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிறுவனங்கள் 1.68 லட்சம் வங்கி கணக்குகளில் பண மதிப்பிழப்பிற்கு பிறகே முதலீடு செய்திருக்கின்றன. பல்வேறு வங்கிகளில் முதலீடு செய்துள்ள இதுபோன்ற நிறுவனங்களின் விவரங்களைச் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.