இந்திய ஆகாயப்படையைச் சேர்ந்த 'மிராஜ் 2000' போர்விமானம், பெங்களூருவிலுள்ள 'ஹிந்துஸ்தான் ஏரொனோட்டிக்ஸ்' விமான நிலையத்தில் விழுந்து நொறுங்கியதில் விமானத்திற்குள் இருந்த இரு விமானிகளும் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீர் அப்ரோல், சித்தார்த் நேகி ஆகியோர் மாண்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் சம்பவ இடத்திலே மாண்டதாகவும் மற்றொருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று இந்திய ஆகாயப்படை கூறியது. விமானம் விழுந்த இடத்திலிருந்து கரும்புகை வானளவு உயர்ந்ததைக் காட்டும் படங்களும் காணொளிகளும் பல்வேறு ஊடகங்களில் வெளிவந்துள்ளன.