மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி கோல்கத்தாவில் கடந்த திங்கட்கிழமை முதல் அரசு பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கட்கிழமையன்று நோயாளியின் உறவினர் ஒருவர் பயிற்சி மருத்துவர் ஒருவரை தாக்கியதைத் தொடர்ந்து போராட்டத்தில் இறங்கினர் பயிற்சி மருத்துவர்கள்.
அவர்களுக்கு ஆதரவாக அரசு மருத்துவர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதால் அம்மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் நடைபெறும் நிலையில் கோல்கத்தாவின் ஒரு மருத்துவமனைக்கு மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று நேரில் சென்றார்.
நீதி வேண்டும் எனக் கூறி மருத்துவர்கள் குரல் எழுப்பியதைத் தொடர்ந்து அவர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் நான்கு மணி நேரத்திற்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என கட்டளையிட்டார்.
மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தின் பின்னணியில் அரசியல் சதி உள்ளது என்றும் மருத்துவர்கள் நான்கு மணி நேரத்தில் வேலைக்குத் திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் மம்தா நேற்று எச்சரித்தார்.
ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தை நீட்டித்து வருகின்றனர். நான்காவது நாளாக நீடிக்கும் போராட்டத்தால் மருத்துவ பராமரிப்புச் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, டெல்லியிலுள்ள மருத்துவமனை மருத்துவர்கள் உட்பட மும்பை, ஹைதராபாத் என இந்தியாவின் பல்வேறு பகுதி மருத்துவர்கள் மேற்கு வங்காள மருத்துவர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி உள்ளனர்.
நாடு முழுவதும் பல மருத்துவர்கள் தங்களின் பணி விலகல் கடித்தத்தையும் சமர்ப்பித்துவருகின்றனர்.