புதுடெல்லி: தனது தந்தையின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு கார்த்தி சிதம்பரம் அளித்த பேட்டியில், “என் வாழ்நாளில் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜியை நான் பார்த்ததில்லை. நேரடியாகவோ, மறைமுகமாகவோ அவர்களின் நிறுவனத்துடன் நான் தொடர்பு வைத்திருந்ததும் இல்லை.
“என்னை விசாரணைக்கு சிபிஐ அழைத்துச் சென்றபோதுதான் இந்திராணி முகர்ஜியைப் பார்த்தேன். எனது தந்தைக்கு மட்டுமல்ல இது காங்கிரசுக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கை. அரசுக்கு எதிரான எனது தந்தையின் குரலைக் கட்டுப்படுத்தும் முயற்சி இது.
“அவரைக் கைது செய்யவேண்டிய அவசியமே இல்லை. எந்த ஒரு விசாரணை அமைப்பின் முன்பும் முன்னிலையாகி பதில் சொல்ல என் தந்தைக்கு எந்த நீதிமன்றமும் உத்தரவிடாதபோது கைது ஏன்? சட்டரீதியில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளேன்,” என்று கூறினார்.
“கடந்த 2008ல் நடந்த சம்பவத்திற்கு 2017ல் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. நான் 4 முறை அதிரடி சோதனைக்கு உட்படுத்தப் பட்டேன். எனக்கு 20 முறை அழைப்பாணை அனுப்பப்பட்டது. இதையொட்டி 12 மணி நேரம் முன்னிலையாகி விளக்கம் அளித்துள்ளேன்.
“சிபிஐயின் விருந்தினர் போன்று 11 நாட்கள் இருந்தேன். என்னைச் சார்ந்த பிறருக்கும் அழைப்பாணை அனுப்பி விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் எந்தவொரு வழக்கும் இல்லை,” என்றார் கார்த்தி சிதம்பரம்.
இதற்கிடையே ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சத்தியமூர்த்தி பவன் பகுதியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் அண்ணா சாலையில் குவிந்த காங்கிரஸ் கட்சியினர், பாஜகவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அடையாறில் கராத்தே தியாகராஜன் தலைமையில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் ப. சிதம்பரத்தின் கைதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ப.சிதம்பரத்தை கைது செய்ய நேற்று மாலை புலனாய்வு அமைப்புகள் கையாண்ட விதத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கடுமையாக விமர்சித்துள்ளார். “ப.சிதம்பரம் ஒரு மூத்த அரசியல் தலைவர், முன்னாள் நிதயமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்தவர், அவரை கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது,” என்று கூறியுள்ளார்.