உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த் நாகர் மாவட்டத்தில் இளையர் ஒருவரைக் கடுமையாகத் தாக்கியதன் தொடர்பில் போலிசார் இருவர் தற்காலிகமாக வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இளையருடன் இருந்த சிறுவன், அந்தச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்திருப்பது வழிப்போக்கர் எடுத்த காணொளி ஒன்றில் தென்படுகிறது. அந்தக் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
பாதிக்கப்பட்ட இளையரை போலிசார் ஏன் தாக்கினர் என்பது இதுவரை தெளிவாக அறியப்படவில்லை. சிறுவனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளையரின் அடையாளத்தைச் சோதனையிட போலிசார் அவரை நிறுத்தியபோது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டதாகக் கூறப்படுகிறது.
போலிசாரில் ஒருவர் அந்த இளையரைத் தரைமீது அழுத்தி அவர் மீது அமர்ந்துகொண்டதை அந்தக் காணொளி காட்டுகிறது. தமது மோட்டார் சைக்கிளின் திறவுகோலைப் பறிமுதல் செய்ய அந்த இளையர் போலிசாரை அனுமதிக்கவில்லை. “நான் என்ன தவறு செய்தேன்” என்று அந்த இளையர் போலிசாரிடம் பலமுறை கேட்டது காணொளியில் பதிவானது.