சபரிமலை விவகாரத்தில் அனைத்து வயதுடைய பெண்களும் ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல அனுமதி அளித்து, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்கப்படவில்லை.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள், குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைவதற்கு 1991ல் கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இதை கடந்த ஆண்டு செப்டம்பரில் ரத்து செய்த இந்திய உச்ச நீதிமன்றம், அனைத்து வயது பெண்களும், பாலின வேறுபாடுகளின்றி சபரிமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான, சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.
பல பெண்கள் சபரிமலைக் கோயிலுக்குச் செல்ல முற்பட்டனர். அதற்கு பல தரப்புகளிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியதால் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று காலை தீர்ப்பு வழங்கியது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பை வாசித்தார். அதில், “பெண்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டுமல்ல வேறு கோவில்களிலும், மசூதிகளிலும் உள்ளது. அனைத்து சமயத்தினரும் அவரவர் சமய நம்பிக்கையைக் கடைபிடிக்க உரிமை உள்ளது. சமய வழிபாடு, நம்பிக்கை என்ற பெயரில் பாகுபாடு கூடாது. சமயம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. எனவே, இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட வேறு அமர்வுக்கு பரிந்துரை செய்கிறோம்,” என்றார்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான இந்த அமர்வில் நீதிபதிகள் பாலி நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய் சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அங்கம் வகித்தனர்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity