இந்தியாவையே கதிகலங்கச் செய்த கொடூரமான நிர்பயா கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியின் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதனால் அக்ஷய் குமார் சிங்குக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி தலைநகர் டெல்லியில் மருத்துவ மாணவியான நிர்பயாவை ஓடும் பேருந்தில் ஆறு பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு பின்னர் கொடூரமான முறையில் கொல்ல முயற்சி செய்தனர்.
இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐவரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் டெல்லி திகார் சிறையில் தன்னை மாய்த்துக் கொண்டார்.
எஞ்சிய நால்வரில் மூவரின் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
நான்காவது குற்றவாளியான அக்ஷய் குமார் சிங்கும் பின்னர் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி பாப்டே தலைமையில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் இந்த வழக்கிலிருந்து தனிப்பட்ட காரணங்களால் விலகிக்கொள்வதாக தலைமை நீதிபதி பாப்டே அறிவித்தார். இதையடுத்து இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர். பானுமதி, அசோக் பூஷன், எஸ்.ஏ. போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் அக்ஷய் குமார் சிங்கின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ஏ.பி.சிங், மரண தண்டனை என்பது மனித உரிமைகளுக்கு எதிரானது, இந்தியாவிலிருந்து மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அரசாங்க வழக்கறிஞர் துஷார் மேத்தா, மனித குலத்திற்கு எதிராக இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு கருணை காட்டவே கூடாது என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட அமர்வு, குற்றவாளி அக்ஷய் குமார் சிங்கின் சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து அக்ஷய் குமார் சிங்கின் தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ள நிர்பயாவின் தாயார், “எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.
“இந்த வழக்கில் பாட்டியாலா நீதிமன்றம் நால்வருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனை செயல்படுத்தப்பட வேண்டும் என்று விரும்பினேன். அதன்படியே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது,” என்றார் அவர்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity