டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பாதுகாவலர்களைத் தாக்கியதாகவும் கணினிச் சேவையகத்தைச் சேதப்படுத்தியதாகவும் கூறி அப்பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவி ஆய்ஷி கோஷ் உட்பட 27 பேர் மீது போலிஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
கடந்த ஞாயிறன்று முகமூடி அணிந்த பலர் ஆயுதங்களுடன் பல்கலைக்கழகத்தினுள் நுழைந்து ஆசிரியர்களையும் மாணவர்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கியதில் ஆய்ஷி கோஷ் உட்பட கிட்டத்தட்ட 30 பேர் காயமடைந்தனர். அத்துடன், அந்தக் கல்வி நிலையத்தின் பல சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டன.
இத்தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறைப் பிரபலங்கள் என பல தரப்பிலிருந்தும் கடும் கண்டனம் எழுந்தது. தாக்குதல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் அனைவரும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், மாணவர் சங்கத் தலைவி ஆய்ஷி உள்ளிட்டோர் மீது பல்கலைக்கழக நிர்வாகம் போலிசில் புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“அவர்கள் அத்துமீறி நுழைந்து, கணினிச் சேவையகத்தைச் சேதப்படுத்தி, அதைச் செயல்படாமல் செய்துவிட்டனர்,” என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, மாணவர்கள், ஆசிரியர்கள் மீதான தாக்குதலுக்கு ‘இந்து ரக்ஷா தளம்’ என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
“ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தேச விரோத, இந்து எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மற்ற பல்கலைக்கழகங்களிலும் இதேபோன்று தாக்குதல் நடத்துவோம்,” என்று டுவிட்டர் வாயிலாக காணொளி ஒன்றை வெளியிட்டு எச்சரித்துள்ளார் அந்த அமைப்பின் தலைவரான பூபேந்திர தோமர் என்ற பிங்கி சௌத்ரி.
இந்நிலையில், தாக்குதலில் தலையில் காயமுற்ற பேராசிரியர் சுசாரித்தா சென் போலிசில் புகார் அளித்துள்ளார்.
இத்தகைய சூழலில், கடந்த 5ஆம் தேதி பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த வன்முறை குறித்து விசாரிப்பதற்காக தடயவியல் ஆய்வகக் குழுவினர் நேற்று அந்தக் கல்வி நிலையத்திற்குச் சென்றனர்.
இதற்கிடையே, இந்திய அரசாங்கம் புதிதாக அமைத்துள்ள ‘புள்ளிவிவர நிலைக்குழு’வின் 28 உறுப்பினர்களில் ஒருவரான ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் சி.பி.சந்திரசேகர், அக்குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இவ்வேளையில், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதலைக் கண்டித்து, இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அந்த வகையில், சென்னையில் நேற்று முன்தினம் போராட்டம் நடத்திய மாணவர்களை திமுக எம்.பி. கனிமொழி சந்தித்துப் பேசினார்.