ஹைதராபாத்: முதியோர் இல்லத்தில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த முதியவர்களை தெலுங்கானா போலிசார் மீட்டுள்ளனர். இதையடுத்து முதியோர் இல்ல நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.
ஹைதராபாத் நகருக்கு அருகே உள்ள கிராமம் ஒன்றில் முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் மனநிலை பாதிக்கப்பட்டுள்ள முதியவர்கள் பலர் தங்கியிருந்தனர்.
இந்நிலையில் முதியவர்கள் மனிதநேயமற்ற முறையில் நடத்தப்படுவதாகப் பல்வேறு தரப்பினரும் புகார் எழுப்பினர்.
முதியவர்கள் பலர் சங்கிலி
களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளதாகவும், மேலும் பல்வேறு வகையில் துன்புறுத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக சிலர் காவல்துறையிலும் புகாரளித்தனர்.
அதன் பேரில் தெலுங்கானா போலிசார் நேற்று முன்தினம் அந்த முதியோர் இல்லத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது ஓர் அறையில் முதியவர்கள் பலர் அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
அறையின் பூட்டை உடைத்துப் பார்த்தபோது 73 முதியவர்கள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது கண்டு போலிசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலனுக்கான சட்டத்தின்கீழ் அந்த முதியோர் இல்ல நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவானது.
விசாரணை நீடித்து வருவதாகப் போலிசார் தெரிவித்துள்ளனர்.