புதுச்சேரியில் நோணாங்குப்பம் பகுதியில் இருக்கும் நிருபன் ஞானபானு என்பவர் திருக்குறளை ஒப்பிப்பவர்களுக்கு இலவச அசைவ விருந்து வைக்கிறார்.
இவர் சுமார் 6 ஆண்டுகளாக அமெரிக்காவில் சமையல் கலைஞராக வேலை பார்த்தவர் என்று கூறப்படுகிறது.
சொந்த ஊருக்குத் திரும்பி உணவுக்கடை நடத்த விருப்பம் கொண்ட அவர், புதுச்சேரியில் நோணாங்குப்பம் பகுதியில் அசைவ சாப்பாட்டுக் கடையை அமைத்து அதற்கு ‘ஜல்லிக்கட்டு’ என்று பெயர் சூட்டினார்.
கூரை வேய்ந்த இடங்களில் மேசை, நாற்காலி போட்டு கடையை கிராமத்து பாணியில் அமைத்திருக்கும் இவரது கடையில் சைவ, அசைவ உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன.
ஏற்கனவே இந்த கடை அங்கு ஓரளவுக்கு பிரபலமானது தான்.
இந்நிலையில் மேலும் வாடிக்கையாளர்களை கவருவதற்காக கடை உரிமையாளர் கவர்ச்சிகரமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இயல்பாகவே திருக்குறள் மீது தனக்கு மிகுந்த பற்று உண்டு என்று கூறும் நிருபன் ஞானபானு , 100 திருக்குறள்களை ஒப்பிப்பவர்களுக்கு வாழையிலையில் 21 வகை உணவுகளுடன் அசைவ விருந்து படைக்கிறார்.
பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் 100 திருக்குறளை ஒப்பித்தால், அந்தப் பிள்ளையின் குடும்பத்தாருக்கே இலவச விருந்தளிக்கிறார் இவர்.
அவரது கடையை இந்த அறிவிப்பு மேலும் பிரபலமாக்கியுள்ளது. புதிய முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் கூறுகிறார் கடையின் உரிமையாளரான நிருபன் ஞானபானு.
தற்காலத்தில் யாரும் திருக்குறளுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் அளிக்காததால் தாம் இவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருப்பதாகக் கூறும் அவர், இதற்காகவாவது மக்கள் திருக்குறளைப் படித்தால் மகிழ்ச்சி என்கிறார்.
#திருக்குறள் #அசைவ விருந்து #ஜல்லிக்கட்டு உணவகம்