இந்தியாவுக்குச் சென்ற இத்தாலிய சுற்றுப் பயணிகள் 16 பேருக்கு இன்று (மார்ச் 4) கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதையடுத்து, அங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.
இத்தாலியைச் சேர்ந்த ஒருவருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக ராஜஸ்தானில் நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது.
இத்தாலிய சுற்றுப் பயணிகள் 21 பேருக்கு புதுடெல்லியில் கொரோனா கிருமித்தொற்று பரிசோதனை செய்யப்பட்டதாக தொலைக்காட்சி செய்திகள் குறிப்பிட்டன.
உலக அளவில் சுமார் 3,200 பேர் கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்திருக்கும் நிலையில் சீனா, தென்கொரியா, இத்தாலி, ஈரான், ஜப்பான் ஆகிய நாடுகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தியுள்ள இந்தியா, தற்போது இத்தாலி, ஈரான், தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து வருவோருக்கு தடை விதித்துள்ளது. ஆனால், அனைத்துலக அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள், பேராளர்களுக்கு இந்தத் தடையில் விலக்கு உள்ளது.
“பதற்றம் தேவையில்லை. சிறிய ஆனால் முக்கியமான சுய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, நாம் இணைந்து செயல்பட வேண்டும்,” என்று கிருமித்தொற்று பரவல் நிலவரம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
#கொரோனா #இந்தியா #தமிழ்முரசு