கொரோனா கிருமியின் கோரப் பிடியில் உலகம் சிக்கித் தவிக்கும் இவ்வேளையில் உடலால் தனித்திருந்து உள்ளத்தால் ஒன்றிணைந்து போராடி வரும் மக்களிடையே நம்பிக்கையின் கீதமாக பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளது நடிகர் கமல்ஹாசனின் குழு.
கமல்ஹாசனின் வரிகளுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை இயக்கி, தயாரித்துள்ளார் கமல்ஹாசன்.
சுமார் 5 நிமிடங்களுக்கான இந்தக் பாடல் காணொளியில், கொரோனா கிருமியால் இந்தியர்கள் படும் இன்னலையும் அதிலிருந்து மீள ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தங்களால் இயன்ற உதவியை மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ள திரு கமல், அறிவும் அன்புமே அழிவின்றி வாழ்பவை என்று குறிப்பிடுகிறார்.
மகேஷ் நாராயணன் எடிட்டிங்கில் உருவாகியுள்ள இந்தப் பாடலுக்கு லிடியன் நாதஸ்வரம் பியானோ வாசித்துள்ளார்.
நடிகர் கமலுடன் பாம்பே ஜெயஸ்ரீ, ஆண்ட்ரியா, யுவன் சங்கர் ராஜா, அனிருத், சித்தார்த், முகேன் ராவ், சித் ஸ்ரீராம், சங்கர் மகாதேவன், ஷ்ருதி ஹாசன், தேவி ஸ்ரீ பிரசாத் உட்பட பிரபல கலைஞர்கள் பாடியுள்ள இந்தப் பாடல் இம்மாதம் 23ஆம் தேதி வெளியிடப்பட்டது.