புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக சுமார் 10 மில்லியன் வெளி மாநிலத் தொழிலாளர்கள் பல மாநிலங்களிலும் பல நாட் களாகத் தேங்கிக் கிடக்கிறார்கள்.
அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல அனுமதிக்கும்படி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
அத்தகைய ஊழியர்களை ஏற்றிச் செல்ல பேருந்து, ரயில்களை அனுமதிக்கும்படி மத்திய அரசை பல மாநிலங்கள் கேட்டுக்கொண்டுள்ளன. ஆனால் கட்டுப்பாடுகள் காரணமாக இதுநாள்வரை மத்திய அரசு மாநில அரசுகளுக்குச் செவி சாய்க்கவில்லை,
இந்த நிலையில், நேற்று முதன்முதலாக தெலுங்கானாவில் இருந்து ஜார்க்கண்ட் தொழிலாளர்கள் 1,200 பேர், 24 பெட்டிகளைக் கொண்ட ரயிலில் சொந்த ஊர் சென்றனர்.
அதேவேளையில், ராஜஸ்தானில் இருந்து வியாழக்கிழமை ஒரே நாளில் 40,000 வெளி மாநிலத் தொழிலாளர்கள் பேருந்துகள் மூலம் தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
இப்படி பல மாநிலங்களும் வெளி மாநிலத்தவர்களை அவரவர் ஊர்களுக்கு அனுப்பத் தொடங்கி இருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.