புதுடெல்லி: கொரோனா கிருமித்தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள், மருந்து நிறுவனங்கள், மத்திய அரசு ஆகியவை இணைந்து செயல்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சி எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து பல்வேறு மருந்து உற்பத்தி நிறுவன பிரதிநிதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், மருந்து கட்டுப்பாடு நடைமுறைகள் காலத்துக்கு ஒவ்வாத வகையில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
கடினமான அந்த நடைமுறைகளை மாற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
“கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதற்கான முத்தரப்பு ஒருங்கிணைப்பை மேம்படுத்த வேண்டும். ஆராய்ச்சியை தீவிரப் படுத்த வேண்டும். அறிவியல் ஆராய்ச்சியில் உலகின் தலை சிறந்த நாடு இந்தியா என்பதை நாம் நிரூபிக்க வேண்டும்,” என்றார் பிரதமர் மோடி.
தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு பிரதமர் புகழாரம் சூட்டியதாக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மூத்த அதிகாரி தெரிவித்ததாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
“அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் புதிய மருந்துகளை அவசரகால அடிப்படையில் சோதனை செய்ய அந்த நாட்டு சட்டங்கள் அனுமதிக்கின்றன. ஆனால் இந்தியாவில் புதிய மருந்துகளை விலங்குகளுக்கு அளித்து சோதனை நடத்துவதற்குக்கூட பல மாதங்கள் ஆகின்றன,” என்று பிரதமர் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் என்று அந்த அதிகாரி குறிப்பிட்டதாக அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது.
இதற்கிடையே கொரோனா கிருமிப் பரவல் தடுப்பு பணியில் உள்ள காவல்துறையினர், மருத்துவர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பாராட்டுக்குரியவர்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் காணொளி வசதி மூலம் பங்கேற்றுப் பேசியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“கொரோனா கிருமியை வெற்றி கொள்ள அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். மனித நேயத்திற்காகவும் உலக நாடுகளுக்காகவும் இந்தியா உழைத்து வருகிறது. நோய்ப்பரவல் தடுப்புப் பணியில் உள்ளவர்களுக்கு தலைவணங்குகிறேன்,” என்றார் பிரதமர் மோடி.