கோவில்களில் பக்தர்கள் வழக்கமான முறையில் சாமி தரிசனம் செய்வதற்கு மத்திய மாநில அரசுகள் அனுமதி அளித்தால் ஏழுமலையான் கோவில் உட்பட திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான அனைத்துக் கோவில்களும் உடனுக்குடன் திறக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்யத் தொடங்கி இருப்பதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
கோவிலில் தினமும் 14 மணி நேரம் மட்டும் பக்தர்களை சாமி தரிசனத்திற்கு அனுமதிப்பது, ஒரு மணி நேரத்துக்கு 500 பேருக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி என்ற கணக்கில் பக்தர்களை சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வைப்பது, சிறப்பு தரிசனத்துக்கான அனுமதிச்சீட்டுகளை இணையம் வழி விற்பது, அதில் தரிசனத்துக்கான நேரத்தைக் குறிப்பிடுவது, தினமும் 7 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகளைத் திருப்பதி தேவஸ்தானம் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும் ஏழுமலையான் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட உள்ளது.
திருமலைக்குச் செல்லும் அனைத்து வாகனங்கள் மீதும் கிருமிநாசினி தெளிக்கப்படும் என்றும், திருமலையின் அனைத்துப் பகுதிகளிலும் பக்தர்கள் கட்டாயமாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.