மதுரையில் ‘சிலப்பதிகாரப் பூங்கா’ என அழைக்கப்படும் பூங்கா ஒன்று வரலாற்றுத் தகவல்களுடன் மாவட்ட போலிஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவி வரும் இவ்வேளையில், ஆரவாரமின்றி எளிமையான முறையில் வரும் திங்கட்கிழமை (ஜூன் 1), அது திறக்கப்பட உள்ளதாக மதுரை மாவட்ட போலிஸ் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
அது குறித்து குறிப்பிட்ட திரு மணிவண்ணன், “வணிகம் செய்ய மதுரைக்கு வந்த கோவலனும், கண்ணகியும் கடச்சனேந்தலில் உள்ள ஒரு வீட்டில் தங்கினர்.
“மாவட்ட போலிஸ் கண்காணிப்பாளர் அலுவலகம் அமைந்துள்ள இடத்தின் வழியாகத்தான் பாண்டிய மன்னனிடம் கண்ணகி நியாயம் கேட்க சென்றார். இதனால் சிலப்பதிகார பூங்கா உருவாக்கும் எண்ணம் ஏற்பட்டது,” என்றார்.
“மதுரையை பற்றிய குறிப்புகள் சங்க கால இலக்கியங்கள் பலவற்றில் உள்ளன. அதிலும் பண்டைய கால மதுரையை அங்குலம் அங்குலமாக பதிவு செய்த இலக்கியம் சிலப்பதிகாரம்தான்.
“சிலப்பதிகாரத்தையும், மதுரையையும் சிறப்பிக்கும் வகையில் கடம்பு, வாகை, வாழை, மா, பலா, வேங்கை, கொன்றை, மருது, மூங்கில், இலவ மரம் என பல வகையான மரங்கள் அன்றைய மதுரையில் இருந்ததாக சிலப்பதிகாரம் சொன்னது. அந்த வகை மரங்களை எல்லாம் தேடி பிடித்து நட்டு வைத்து எங்களது அலுவலகத்தின் முன்பு சுமார் 2 ஏக்கரில் சிலப்பதிகார பூங்காவை உருவாக்கி இருக்கிறோம்.
“மேலும், பூங்காவின் நுழைவு வாயிலில் சிலப்பதிகார கதை சுருக்கத்தையும், பூங்காவுக்குள் ஆங்காங்கே மங்கள வாழ்த்துப் பாடல்களின் கல்வெட்டுகளும் வைக்கப்பட்டுள்ளன,” என்று குறிப்பிட்டார் அவர்.
பூங்காவின் நடுவில் பிரமாண்ட கால் சிலம்பு சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது இந்தப் பூங்காவுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online