புதுடெல்லி: அனைத்து மாநில கல்வித் துறை செயலாளர்களுடன் மத்திய பள்ளி கல்வித்துறை செயலாளர் ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டுவிட்டர் மூலமாக ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
“தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறப்பது சம்பந்தமாக என்ன செய்யலாம் என்பது குறித்து பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் இருந்து பல்வேறு வேண்டுகோள்கள் எங்களுக்கு வந்துள்ளன. அதன் அடிப்படையில் பள்ளி பாடத்திட்டத்தில் சில பாடங்களை குறைக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறோம். அதேபோல வரும் கல்வி ஆண்டில் பள்ளிக்கூடத்தின் நேரத்தையும் குறைப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்,” என்றார்.
மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் கூறும்போது, “பள்ளிகளை அடுத்த 2 மாதத்தில் திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பாடத் திட்டம் முதலில் 10ஆம் வகுப்பு, பிளஸ்2 ஆகியவற்றில் குறைக்கப்படும்,” என்றனர்.