உலக அளவில் கொரோனா கிருமித்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கிருமிநாசினியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படும் வேளையில், கிருமிநாசினி தெளித்ததால் தீப்பற்றிய சம்பவம் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது.
கண்காணிப்பு கேமரா ஒன்றில் பதிவான ஒரு காட்சியில், கொரோனா கிருமி தடுப்பு நடவடிக்கையாக இருசக்கர வாகனங்களின் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவது தெரிகிறது.
அவ்வாறு சென்ற வாகனம் ஒன்றின் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டதும் உடனே தீப்பற்றி எறிவதும் காணொளியில் தெரிகிறது. அந்த வாகனத்தை ஓட்டிச் சென்ற ஆடவர், வாகனத்தை அப்படியே போட்டுவிட்டு, தப்பித்து ஓடுவதையும் பார்க்க முடிகிறது. இந்தச் சம்பவம் இந்தியாவின் எந்தப் பகுதியில் நிகழ்ந்தது என்பது தெரியவில்லை.
கிருமிநாசினி தெளித்தபோது அந்த வாகனம் சூடாக இருந்ததாகக் கூறப்படுகிறது. கிருமிநாசினிகளைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்தக் காணொளி பரவலாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
பெரும்பாலான கிருமிநாசினிகளில் சுமார் 60% ஆல்கஹால் கலந்திருப்பதால், அது எளிதில் தீப்பற்றக்கூடியது.
அத்தகைய கிருமிநாசினிகளை சமையலறை உட்பட சூடான இடங்களில் வைப்பதோ, பயன்படுத்துவதோ கூடாது என்று நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, திறந்த வெளியில் கிருமிநாசினி தெளிப்பதால் எந்த பயனும் இல்லை என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online