புதுடெல்லி: இந்தியா-சீனா எல்லையில் அமைதி திரும்புவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளபோதும் உள்நாட்டில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடையே நீடிக்கும் சொற்போர் இன்னும் நின்றபாடில்லை.
இந்திய எல்லைப் பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவியதா இல்லையா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகிறார்.
ஆனால், எல்லைப் பிரச்சினையை காங்கிரஸ் அரசியலாக்கி வருகிறது என பாஜக குற்றம் சாட்டி வருகிறது. 2010-2013ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியின்போது சீன ராணுவம் 600 முறை இந்தியாவிற்குள் ஊடுருவியது என்றும் பல நூறு சதுர கிலோமீட்டர் நிலத்தை மன்மோகன் அரசு சீனாவிற்குத் தாரை வார்த்துவிட்டது என்றும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூறியிருந்தார்.
இதற்குப் பதிலடி தரும் விதமாக, “2015ஆம் ஆண்டில் இருந்து சீனா 2,264 முறை இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ளது. இது பற்றி பிரதமர் மோடியிடம் வினா எழுப்ப திரு நட்டாவிற்குத் துணிச்சல் உண்டா?” என்று காங்கிரசின் ப.சிதம்பரம் கேட்டுள்ளார்.