உரிமையாளரின் மறைவால் அலறித் துடித்த நாய் ஒன்று, அவரது சடலம் வீட்டிலிருந்து கொண்டுபோவதைக் கண்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அவ்வட்டாரவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவின் கான்பூரில் உள்ள மாலிக்புரம் பகுதியில் பெண் நாய் ஒன்றை வளர்த்து வந்தார் மருத்துவர் அனிதா ராஜ். நீண்ட காலமாக சிறுநீரகப் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த மருத்துவர் அனிதா ராஜ் கடந்த புதன்கிழமை காலமானார்.
அவரது உடல் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்டபோது அதனைக் கண்டு, அவரது வளர்ப்பு நாய் சத்தமாக அலறித் துடித்ததாகக் கூறப்பட்டது.
மருத்துவரின் மகன் அந்த நாயை ஓர் அறைக்குள் அடைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது.
மருத்துவர் அனிதாவின் உடலை இறுதிச் சடங்குக்காக வீட்டிலிருந்து கொண்டுபோனபோது, வீட்டின் நான்காவது மாடிக்குச் சென்ற அந்த நாய், ஓலமிட்டதுடன், அங்கிருந்து கீழே விழுந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டது.
மருத்துவர் அனிதாவின் கணவர் ராஜ்குமாரும் மருத்துவர்தான். தனது மனைவி 13 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நாயை மீட்டு, தத்தெடுத்ததாகக் கூறினார் மருத்துவர் ராஜ்குமார். அப்போதிருந்து குடும்பத்தின் ஓர் அங்கமாக அந்த நாய் இருந்து வந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.