இந்தியா-சீனா வீரர்கள் இடையே லடாக் எல்லைப் பகுதியில் கடந்த ஜூன் 15ம் தேதி நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 3) லே பகுதிக்கு திடீர் பயணம் மேற்கொண்டார்.
அங்கு அவர் ராணுவ வீரர்களுக்கு மத்தியில் உரையாற்றினார்.
பாதுகாப்புத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், ராணுவத் தலைவர் எம்.எம்.நரவனே ஆகியோர் பிரதமர் மோடியுடன் இருந்தனர்.
தமது உரையின்போது, உலகின் மிகக் கடினமான சூழல் நிலவும் பகுதியில், முழு உழைப்பைக் கொடுத்து நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களின் வீரம், தைரியம், உழைப்பு ஆகியவற்றுக்கு எதுவும் ஈடாகாது என்று குறிப்பிட்டார் திரு மோடி.
“இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு இந்தியனும், உலகின் பல்வேறு இடங்களில் இருக்கும் இந்தியர்களும், நீங்கள் நாட்டை பலம் மிகுந்ததாகவும் பாதுகாப்பானதாகவும் வைத்திருப்பீர்கள் என்று நம்பிக்கை கொண்டுள்ளார்கள்,” என்று ராணுவ வீரர்களைப் பார்த்து உரையாற்றிய திரு மோடி, “தாய் நாட்டிற்காக உயிர் நீத்த அனைத்து வீரர்களுக்கும், உங்களுக்கும் தலை வணங்குகிறேன்,” என்றார்.
-லடாக்கில் இருக்கும் ஒவ்வொரு மூலைக்கும், ஒவ்வொரு கல்லுக்கும், ஒவ்வொரு நதிக்கும், அது இந்தியாவைச் சேர்ந்தது என்பது தெரியும்.
எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், பிரதமரின் திடீர் வருகையும் அவரது உரையும் ராணுவ வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருந்ததாகக் கூறப்பட்டது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online